தமிழில் சினிமா பேசத் தொடங்கிய பின் அமோக ரசிகர்கள் ஆதரவுடன் வலம் வந்த முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். சினிமாவில் நடிப்பதற்கு முன், தனது குரல்வளத்தால் கச்சேரிகளில் பாடி ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். அவரது கணீர் குரலுக்கும், கம்பீரமானத் தோற்றத்துக்கும், தோள்வரை புரளும் சிகைக்கும் ஆராதகர்கள் ஏராளம் இருந்தனர். 1934 இல் பவளக்கொடி படத்தில் தியாகராஜ பாகவதர் முதன்முதலில் நடித்தார். இது, அவர் நடித்து வந்த பவளக்கொடி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
தியாகராஜ பாகவதர் 15 திரைப்படங்களில் நடித்தார். அதில் பல படங்கள் ரசிகர்கள் ஆதரவுடன் ஓடி சரித்திர சாதனை புரிந்தன. குறிப்பாக அவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியது. 1944 இல் மஞ்சள் பத்திரிகையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கலைவாணருடன், தியாகராஜ பாகவதரும் கைதானார்.
மூன்று வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தபின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். தங்கத் தட்டில் சாப்பிட்டு, ரசிகர்களின் இதயநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதர் சிறை மீண்டபோது, யாருக்கும் வேண்டாத நபரானார். அதன் பிறகு அவர் நடித்தப் படங்கள் ஓடவில்லை. 1957 இல் புது வாழ்வு என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அது பெரும் கடன்சுமையை கொண்டு வந்தது.
ஐம்பதுகளின் இறுதியில் தியாகராஜ பாகவதரின் கண் பார்வையும் மங்கத் தொடங்கியது. கச்சேரிகள் செய்வதை தவிர்த்தார். அவர் கேட்டுக் கொண்டதால் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு, அவரை வைத்து சிவகாமி என்ற படத்தை தயாரித்தார். பாகவதரின் கண் பார்வை குறைபாடு காரணமாக பல காட்சிகளில் கறுப்புக் கண்ணாடி அணிந்து நடித்தார். படம் தயாரிப்பில் இருக்கும் போதே அவர் இறந்து போனார். அதனால், அவர் இல்லாத காட்கிகளுக்கேற்ப கதையை மாற்றி எடுத்தனர். நடிகர் ஜக்கைய்யாவுக்கு முக்கியத்துவம் உள்பது போல் படம் தயாரானது.
Also read... படம் முழுக்க பெரிய நடிகர்கள்.. திரையை அலங்கரித்த அண்ணா புகைப்படம்.. மறக்க முடியாத ’பூவா தலையா’ திரைப்படம்!
1960 பிப்ரவரி 9 சிவகாமி திரைக்கு வந்தது. படத்தில் ஜி.வரலட்சுமி தியாகராஜ பாகவதரின் மனைவி சிவகாமியாக நடித்திருந்தார். மேலும், எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.பி.முத்துலட்சுமி, கே.கே.சுந்தர், ஜக்கைய்யா உள்பட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசைக்கு பாபநாசம் சிவன், கா.மு.ஷெரீஃப் ஆகியோர் பாடல்கள் எழுதினர். தியாகராஜ பாகவதர், டி.எம்.சௌந்தர்ராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.சி.கிருஷ்ணா, ரத்னமாலா ஆகியோர் பாடல்கள் பாடினர். இந்தப் படத்தில் தியாகராஜ பாகவதர் பாடியிருப்பவை, அவர் முன்பு நடித்த ராஜயோகி படத்துக்காக பாடப்பட்டு, பயன்படுத்தப்படாதப் பாடல்கள் என்றும் தகவல் உள்ளது.
ஒருகாலத்தில் புகழில் திளைத்த பாகவதர் இறந்த போது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. உச்சத்தையும், பாதாளத்தையும் தனது வாழ்நாளில் தரிசித்தவர் அவர். அவரது இறுதிக்காலத்தைப் போலவே அவரது கடைசிப்படமும் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாமல் காணாமல் போனது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema