இந்தியாவில் சினிமா அறிமுகமான போது, இன்றிருப்பதைவிட அதிகமாக சமூகம் சாதியால் பிளவுப்பட்டிருந்தது. உயர்சாதி என்று சொல்லிக் கொண்டவர்களின் கலைகள் வேறாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் என அவர்களால் ஒதுக்கப்பட்டவர்களின் கலை வேறாகவும் இருந்தன. மேல் சாதியினரின் கலைகள் பெரும்பாலும் அரங்கத்தினுள் நிகழ்த்தப்பட்டன. அங்கு கீழ் சாதிக்காரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அபூர்வமாக அவர்களுக்கு அரங்கத்தின் பின்வரிசை ஒதுக்கப்படும்.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் கலைகள் திறந்தவெளியில் நடந்தன. பெரும்பாலும் அவை, அவர்கள் உழைப்பை முடித்துவந்த இரவு நேரங்களிலேயே நடத்தப்படும். இந்த நேரத்தில் சினிமாவின் வருகை இந்த சாதிய தீண்டாமையை புரட்டிப் போட்டது. திரையரங்கத்தில் மேல், கீழ் பாகுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சினிமாவை ரசித்தனர். அரங்கின் முன்வரிசையை ஆக்கிரமித்திருந்த மேல் சாதிக்காரர்கள், திரையரங்கில் பின்வரிசைக்கு தள்ளப்பட்டனர். இந்த மாற்றத்தை ஆதிக்கச் சாதியினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதேநேரம், திரைப்படம் என்ற கலையை அவர்களால் நிராகரிக்கவும் இயலவில்லை. அவர்கள் சினிமாவுக்குள் இசையின் மூலமாக நுழைந்தனர்.
கர்நாடக சங்கீதம் முதன்மையாக பிரதிநிதித்துவப்பட்ட பிறகே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத ஆரம்பித்தனர். திரைப்படம் எடுப்பதற்கான வசதி வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததால் புராணப் படங்களுடன், இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுத்தனர். அதில் ஒரு படம், கர்நாடக இசையின் மூம்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சுயசரிதம். இதனை 1937 இல் பக்த ஸ்ரீ தியாகராஜா என்ற பெயரில் எடுத்தனர்.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அன்றைய சோழ நாட்டின் திருவாரூரில் ராமபிரம்மம், சீதாம்மா என்பவர்களுக்கு மகனாக தியாகராஜர் பிறந்தார். அவர்களுக்கு இவர் மூன்றாவது வாரிசு. இவர் பிறந்ததும் குடும்பம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறில் குடியேறியது. சமஸ்கிருதத்தை கற்றுத் தேர்ந்தவர் சோந்தி வெங்கடராமையரிடம் இசை பயின்றார். 18 வது வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. தியாகராஜரின் தாய் மொழி தெலுங்கு என்பதால் அவரது கீர்த்தனைகள் தெலுங்கில் அமைந்தன. அபூர்வமான ராகங்களில் கீர்த்தனைகள் அமைத்ததால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.
தியாகராஜரின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களை தொகுத்து பக்த ஸ்ரீ தியாகராஜா படத்தை எடுத்தனர். இதனை தயாரித்தது மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் நிறுவனம். இயக்கிய வீரேந்திர தேசாயும் மும்பையைச் சேர்ந்தவர். அவருக்கு தமிழ் அரைகுறை என்பதால், அவரது அசோஸியேட் டைரக்டராக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.பி.கல்யாணராம சாஸ்திரி பணிபுரிந்தார். படத்தின் திரைக்கதையை எழுதியவர் அன்றைய சென்னை நீதிமன்றத்தின் புகழ்பெற்ற அரசு வழக்கறிஞர் எம்.பி.சுந்தரராஜன்.
கர்நாடக இசைப் பாடகரான மாதிரிமங்கலம் நடேச ஐயர் தியாகராஜராகவும், கமலா அவரது மனைவியாகவும் நடித்தனர். படத்தில் மொத்தம் 32 பாடல்கள் இடம்பெற்றன. பெரும்பாலும் தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகள். அதில் 30 தெலுங்கில் அமைந்தவை, இரண்டேயிரண்டு தமிழ்ப் பாடல்கள். அதில் ஒன்று திருடர்கள் கூட்டம் பாடுவது.
அன்று திரைப்படம் என்றால் பாடல்கள்தான். படத்தில் இத்தனை பாடல்கள் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதிகப் பாடல்கள் இருந்தால் அதிகப் புகழ். பக்த ஸ்ரீ தியாகராஜா படத்தின் பாடல்கள் காரணமாக படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
1937 மார்ச் 27 இதே தேதியில் வெளியான பக்த ஸ்ரீ தியாகராஜா தற்போது 86 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema