கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்திரன், உஷா மற்றும் நடிகர் ஆரி, இயக்குநர் சுதா கொங்கரா, கூல் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
விழா மேடையில் பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி அசத்தினார். தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பாடல்களை பாடகர்கள் பாடினர். தந்தை ஏ.ஆர்.ரகுமான் இசையில், மகன் ஏ.ஆர்.அமீன் குரலில் உருவான நினைவிருக்கா பாடலை, விழா மேடையில் இருவரும் Perform செய்தார்கள். இசை வெளியீட்டிற்கு பின்னர் விழா மேடையில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், சிம்புக்காகத் தான், பத்து தல திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
பின்னர், விழா மேடையில் டி.ராஜேந்தர் பேசுகையில், வழக்கம் போல அவரது ஸ்டைலில் ரைமிங்கில் பத்து தல படம் பற்றி பேசினார். சிம்புவுடன் நடித்த அனுபவத்தை நடிகர் கவுதம் கார்த்திக் உணர்வுப் பூர்வமாகப் பகிர்ந்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகர் சிம்பு, லூசு பெண்ணே பாடலை பாடி மேடையில் வெறித்தனமாக நடனமாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என உற்சாகமாக பேசினார். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்குண்டு. ஏனென்றால் இங்க தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.
எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர். கௌதம் கார்த்திக் ஒரு நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்னைகளை சந்தித்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையுதா இல்லையோ, அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். கெளதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
ஏஆர் ரஹ்மான் சார் என் காட்ஃபாதர். ஒரு சிஷ்யனாக அவருக்கு என் மேலே உள்ள அன்பை காப்பாற்றுவேன். ஆன்மிகம் வழியிலும் அவர் எனக்கு குருவாக இருந்துள்ளார். எல்லோரும் என்னிடம், 'முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாஃப்டாக பேசுறீங்கனு கேட்கிறார்கள். அதுக்கு ஒரு காரணம் உள்ளது.
முன்பெல்லாம் 'நான் யாருனு தெரியுமாடானு' என்ற அளவுக்கு பேசியிருக்கேன். ஒப்புக்கொள்கிறேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன் என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்.
இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன் பத்து தல திரைப்படத்தில் துணை கிடையாது என்றும் அதே போல தன்னுடைய வாழ்க்கையிலும் துணை கிடையாது அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன் என்று பேசினார்.
விழா இறுதியில் பத்து தல படக்குழு சார்பாக 50 லட்ச ரூபாய் நிதியை நடிகர் சூர்யா நடத்தும் அகரம் தொண்டு நிறுவனத்திற்கு வழங்குகிறோம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.