ஆந்திரா மாநில மறைந்த முதல்வர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என் டி ராமராவின் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி ராமராவ் குடும்பத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி, என்டி ராமராவ் மகன் பாலகிருஷ்ணா ஆகியோர் உட்பட ராமாராவ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், என்டி ராமராவின் திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை புகழ்ந்தார். சந்திரபாபு நாயுடு பற்றி பேசும் போது எனக்கும் சந்திரபாபு நாயுடுவிற்க்கும் 30 ஆண்டு கால நட்பு உள்ளது என்றும் சந்திரபாபு நாயுடுவை எனக்கு என்னுடைய நண்பர்களில் ஒருவரான மோகன் பாபு அறிமுகம் செய்து வைத்தார் என்றார்.
அன்று முதல் நான் ஐதராபாத் வரும் ஒவ்வொரு முறையும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவேன். அவருடன் பேசும் போது என்னுடைய அறிவு தானாகவே அதிகரிக்கும். அந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். எப்போதும் பொதுமக்களுக்கு சேவை செய்வது பற்றியே அவருடைய பேச்சு இருக்கும். இந்திய அரசியலுக்கு அப்பாற்பட்டு சர்வதேச அரசியலிலும் அவருக்கு நல்ல பிடிப்பு உள்ளது.
முற்போக்கு ஆலோசனை கொண்ட சந்திரபாபு நாயுடு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என ரஜினிகாந்த புகழாரம் சூட்டினார். இதன் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது அந்த துறை பற்றி புரிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஐதராபாத் நகரை ஹைடெக் சிட்டி ஆக மாற்றி ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொழில் துவங்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
இதையும் படிங்க: மம்தா அரசைக் கண்டித்து பேரணி... பேருந்துகள் மீது கல்வீச்சு... பாஜகவினர் கைது...
அவருடைய ஆட்சி காலத்தில்தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. விஷன் 2020 என்ற பெயரில் ஒரு திட்டத்தை அமல்படுத்தி ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அவர் வித்திட்டார். அவருடைய முயற்சியின் காரணமாக இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் அல்லாது சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஐதராபாத்தில் துவக்கின.
எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது முதல் இப்போது வரை என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற அவர் தவறியதே கிடையாது. விஷன் 2047 என்ற பெயரில் 2047 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போது சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: N Chandrababu Naidu, Rajini Kanth