தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 1,339 நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை காரைக்குடி தனியார் பயிற்சி மையம் முற்றிலும் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் என மொத்தம் 1,339 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்வில் ஐ.டி.ஐ, டிப்ளமோ சிவில், பி.இ சிவில் மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதில் காரைக்குடி ஸ்ரீராம் நகரில் இருக்கும் பிரமிடு என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் பிரமிடு பயிற்சி மையத்தை சேர்ந்த 742 மாணவர்கள் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றனர். காரைக்குடியில் 13 பயிற்சி மையங்களில் தேர்வு எழுதிய இப்பயிற்சி மையத்தை சேர்ந்த 302 மாணவர்கள் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் தேர்வு எழுதி 742 பேர் தேர்வு பெற்றுள்ளனர்
இதுகுறித்து விளக்கம் அளித்த இப்பயிற்சி மைய நிறுவனர் கற்பகம், ‘எங்கள் பயிற்சி மையத்தில் 40க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பணிபுரிகின்றனர். பி.இ சிவில் மாணவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.இ மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். பி.இ சிவில் மட்டுமன்றி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்திலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு தேர்விலும் மொத்த பணியிடங்களில் 60 முதல் 65 சதவீதம் மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் தேர்வாகின்றனர். ஒரு முறை மட்டுமே கட்டணம் வாங்குகிறோம். ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு சீனியர் என்ற ஒரு அடையாள அட்டை கொடுத்தால் அவர்கள் தொடர்ந்து நாங்கள் நடத்தும் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கிறோம். பெரும்பாலும் கிராமபுறத்தை சேர்ந்த ஏழை மாணவர்களே இங்கு பயில்கின்றனர். காரைக்குடியில் உள்ள சுற்றுப்புற சூழல் இவர்களை படிக்க தூண்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி: ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி.. விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், " நில அளவையர் உள்ளிட்ட பதவிகளில் அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது. அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி.. மற்ற தேர்வர்கள் அதிர்ச்சி...
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு தொடர்புடைய பயிற்சி நிறுவன தலைவர் விளக்கமளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC