பழனி மலைக்கோயில் உண்டியலில் தவறுதலாக தாலிசங்கிலியை செலுத்திய கேரளாவை சேர்ந்த பெண்ணின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அறங்காவலர்குழு தலைவர் தனது சொந்த நிதியில் தங்கச்சங்கிலியை வழங்கியது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 19ம்தேதி அன்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கார்த்திகா பள்ளிவீட்டை சேர்ந்த சங்கீதா என்ற பெண் சாமிதரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த துளசி மணி மாலையை கழன்று காணிக்கை செலுத்த வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே முக்கால் சவரன் தாலிச்சங்கிலியையும் தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சங்கீதா மலைக்கோவில் அலுவலகத்தில் இதுகுறித்து தெரிவித்தார். மேலும் தனது குடும்பம் மிகுந்த சிரமத்தில் உள்ளது என்றும், எனவே தவறுதலாக உண்டியலில் விழுந்த தாலிச்சங்கிலியை எடுத்து தருமாறு கடிதமாக எழுதி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சங்கீதாவின் புகாரை பெற்றுக்கொண்ட கோவில் அதிகாரிகள், சங்கீதா தெரிவிப்பது உண்மையா என சோதனை நடத்தினர். இதன்படி திருக்கோவில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் சங்கீதா தெரிவித்தது உண்மை என தெரியவந்தது. இருப்பினும் இந்து சமய அறநிலையத்துறையின் நிறுவல் பாதுகாப்பு மற்றும் உண்டியல் கணக்கியல் சட்டம் 1975ன்படி உண்டியலில் விழுந்த எந்த பொருளும் மீண்டும் திரும்பி வழங்கமுடியாது என்பதால் சங்கீதாவின் தாலிச்சங்கிலியை திருப்பி வழங்குவதில் திருக்கோவில் அதிகாரிகள் செய்வதறியாது விழித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கோவில் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் சங்கீதாவின் குடும்ப சூழலை மனதில் கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து தாலிச்சங்கிலியை வழங்க முடிவுசெய்தார். இதன்படி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 17.460 கிராம் எடை அளவுடைய தங்கச்சங்கிலியை வழங்கினார்.இதன்படி தங்கச்சங்கிலியை இன்று அறங்காவல்ர் குழு தலைவர் சந்திரமோகன் வழங்கிய தங்கச்சங்கிலியை அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் மூலமாக கேரள பெண் பக்தர் சங்கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகையை தவறுதலாக செலுத்திய சங்கீதா தனது குடும்பத்தினருடன் திருக்கோவில் தலைமை அலுவலகத்திற்கு வந்து திருக்கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நகையை பெற்றுக்கொண்டார். உண்டியலில் தவறுதலாக தாலிச்சங்கிலியை செலுத்திய பெண்ணுக்கு, அறங்காவலர்குழு தலைவர் தனது சொந்த செலவில் நகையை திரும்ப வழங்கியது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: அங்குபாபு நடராஜன், பழனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindugal, Palani Murugan Temple