கோவை பேரூர் படித்துறையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால்ஆற்றங்கரை மற்றும் நீர்நிலை ஆகியவை மாசுபடுகிறது. ஆனால் இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள படித்துறையில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு, அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறைக்கு திரண்டு வந்து இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இதன்மூலம் இறந்து போன தங்களது முன்னோருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை. இதுதவிர, பேரூர் படித்துறையில் பக்தர்கள் வாரம் முழுக்க தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தும் வருகின்றனர்.
நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த படித்துறையில் திதி கொடுப்பது மரபு என்றாலும், இங்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் நொய்யல் நீர்வழித்தடம் பாழாகி வருகிறது. அங்கு பேரூராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை மக்கள் நிறுத்தவில்லை. இந்த கழிவுகளை பேரூராட்சி நிர்வாகமும் முறையாக அகற்றுவதில்லை.
இதனிடையே பேரூரில் தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கென தனி இடத்தை உருவாக்கி, நொய்யல் வழித்தடத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News