கோவை மாநகரில் உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் இருந்தாலும், காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் தான் பிரதான பேருந்து நிலையங்களாக உள்ளன. வெளியூர் பயணம் என்றாலும் சரி உள்ளூருக்குள் பயணம் என்றாலும் சரி காந்திபுரம் வந்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அளவுக்கு இங்கு பேருந்து வசதிகள் உள்ளன. குறிப்பாக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இரவு நேரம் என்றாலே பிரச்சனைகளும், சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருவது அங்கு வரும் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டவுன் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து செல்கின்றனர். இப்படி இருக்க இங்கு இரவு நேர பணியில் இருக்கும் ஒன்றிரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மது போதையில் வந்து பயணிகளுடன் அவ்வப்போது தகாராறில் ஈடுபடுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மது போதையில் பேருந்தை இயக்குவதே தவறு, ஆனால், இவர்கள் ரத்தம் வரும் வரை பயணிகளைத் தாக்குவதும், கண்ணிய குறைபாட்டுடன் நடந்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்களைத் தாக்கியதால் அனைத்து அரசு பேருந்துகளும் காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு மட்டுமல்லாமல், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்த பிரச்னை பூதாகரமாகவே காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணி அதிகப்படுத்தப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
காவல் ஆணையர் அறிவித்த முதல் நாளிலேயே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இது தவிர இரவு நேரத்தில் சில திருநங்கைகள் பயணிகளை உல்லாசத்திற்கு அழைப்பது மற்றும் பணம் கேட்டு மிரட்டுவது, பயணிகள் நடக்கும் இடத்தை அங்குள்ள வியாபாரிகள் ஆக்கிரமித்து இருப்பது, கழிவறையில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் இந்த பேருந்து நிலையத்தில் தலைதூக்கியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
காவல்துறை மட்டுமல்லாது, மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்துக் கழக நிர்வாகமும் இணைந்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் காந்திபுரம் ஒரு பாலியல் மற்றும் ரவுடீச பகுதியாக மாறும் அபாயம் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
செய்தியாளர் : சௌந்தர்மோகன், கோவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News