வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வெளி நாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை நோய் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு வரும் பயணிகளில் பொதுவாக 2 சதவீத நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆய்வக நிபுணர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து நோய் கண்காணிக்கும் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்வார்கள். கொரோனா பரிசோதனையில் தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரி, மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனிடையே பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், இருமல் தும்மல் ஆகியவை இருக்கும் பொழுது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடிக்கொள்ளுதல் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கோவை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..! நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது...
நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற பயணிகள் வீட்டில் தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவேண்டும். சுய கண்காணிப்பின் போது நோய் அறிகுறி தெரியவந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 1075 என்ற எண்ணில் பயணிகள் தெரிவிக்கவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : சுவுந்தர் மோகன் - கோவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News