விபத்தில் சிக்கியவருக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கார் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சத்திய மூர்த்தி மற்றும் முரளி கிருஷ்ணன். இவர்கள் இருவரும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலத்தில் இருந்து இரு சக்கர வாகனம் மூலமாக வால்பாறை சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வனத்துறைக்கு சொந்தமான ஜீப் மோதியதில் சத்திய மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முரளி கிருஷ்ணன் படுகாயங்களுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் இழப்பீடு கோரி சத்திய மூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு தனித்தனியாக சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக வாதாடிய நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2018ம் ஆண்டு வந்தது.
அதில் கோவை மாவட்ட ஆட்சியர், வனத்துறை மற்றும் வனத்துறை வாகன ஓட்டுநர் ஆகிய மூன்று பேரும் இரு தரப்பிற்கும் சேர்த்து மொத்தம் 51 லட்சம் இழப்பீடு தொகையை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து எதிர் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் ரூ.5 லட்சம் மட்டும் குறைவாக இழப்பீடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அரசு தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு நிறைவேற்றும் மனுவை அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடு தொகைக்கான பொருட்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கார், கணினிகள், டேபிள்கள் மற்றும் சேர் பறிமுதல் செய்ய உள்ளதாக ஆட்சியர் அலுவலக பணியாளர்களிடம் தெரிவித்தனர்.
அதிர்ந்து போன பணியாளர்கள் 50 சதவீத டெபாசிட் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டதாகவும், ஒரு சில தினங்களில் மீத பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், நீதிமன்ற பணியாளர்களை சமாதானப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்ய வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News