கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆரம்ப நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையே இல்லாமல் சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இந்த நோய் ஏற்படுத்தும் தாக்கம், இதன் சிகிச்சைக்கு ஆகும் செலவு என எதையும் சாமானிய மக்களால் ஈடுகட்டவே முடியாது என்ற நிலை உள்ளது. இதனிடையே புற்றுநோய் மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவ்வப்பொழுது அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது புரோசென்ஸ் கிரையோ அப்லேஷன் சிஸ்டம் என்ற புதிய இயந்திரம். இந்த கருவி மூலமாக புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு அறுவை சிகிச்சையே இல்லாமல் சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த கருவி கோவையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் டாம்மி பென் ஹெய்ம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
புற்றுநோய் கட்டி ஆரம்ப நிலையில் இருக்கும் ஒருவரது உடலில், இந்த கருவியில் இருந்து ஊசி மூலமாக லிக்விட் நைட்ரஜன் செலுத்தப்படுகிறது. குளிர்ச்சியான இந்த லிக்விட் நைட்ரஜன் புற்றுநோய் கட்டிகளை கரைப்பதோடு, அங்குள்ள செல்களை உடனடியாக அழித்துவிடுகிறது.
இதன் மூலமாக, அடுத்த வினாடியே பாதிக்கப்பட்ட ஒருவர் புற்றுநோயில் இருந்து உடனடியாக குணமடைகிறார். இதனைத் தொடர்ந்து, அடுத்த 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். பின்னர் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த கருவியானது உடலில் அனைத்து பகுதிகளிலும் சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்லீரல், கணையம், நுரையீரல், மார்பகம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டால் அதனை இந்த கருவி கொண்டு சுலபமாகி குணப்படுத்த முடியும். புற்றுநோய் சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவிட வேண்டி உள்ள நிலையில், இந்த கருவி கொண்டு குறைந்தது ஒரு லட்சம் ரூபாயில் முழுமையான சிகிச்சையை பெற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதில் நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, இந்த கருவி நாள்பட்ட புற்றுநோயை குணப்படுத்த உகந்ததல்ல. ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை மட்டுமே இதனால் முழுமையாக குணப்படுத்த முடியும். இதனால் தான் மருத்துவர்கள் தொடர்ந்து ஆரம்ப நிலையிலேயே அனைத்து நோய்களையும் கண்டறிந்து விடவும், அடிக்கடி முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறித்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer Treatments, Coimbatore, Local News