பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 100 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீது ஏறிய ஒருவர் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பனை மரத்து உச்சியில் அமர்ந்து மது அருந்திய ஆசாமி தான் கொண்டு சென்ற ஸ்நாக்ஸை சாப்பிட்டவுடன் போதை தலைக்கேறிய நிலையில் பனை மரத்திலேயே படுத்து சாய்ந்து உறங்கி விட்டார். இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கோட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த போலீசார் கூச்சலிட்டு சத்தம் போட்டும் அந்த நபர் காதில் விழவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபரை எழுப்ப முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர்.
பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும் கீழே வலை விரித்தும் அந்த நபரை மீட்க முயன்றும் பயனளிக்கவில்லை..
பின்னர் இரும்புக்கூண்டு பொருத்தப்பட்ட கிரேன் கொண்டுவரபட்டு மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் மது போதையில் பனை மரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக தூக்கி இரும்பு குண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர்.
சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் அந்த ஆசாமியை கீழே இறக்கியவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்..
மேலும் படிக்க... திருப்பதி மலையை பூஜை அறைபோல வைத்திருக்க வேண்டும்... முன்னாள் தலைமை நீதிபதி ரமணா
பின்பு போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை செம்மனாம்தியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பதும் மது அருந்திவிட்டு மரம் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
100 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு உறங்கிய நபரால் வால்பாறை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ம.சக்திவேல், பொள்ளாச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.