கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக மூக்கு வழியாக சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வரும்நிலையில், அரசின் உதவியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.
கோவை சவுரிபாளையத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்-செபியா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் தனியார் மருத்துவமனை ஒன்றில் தூய்மைப் பணி செய்து வருகிறார். செபியா கூலித்தொழில் செய்து வந்தார்.
இதனிடையே செபியாவுக்கு தொண்டையில் கட்டி போன்று தோன்றியுள்ளது. இதனால் கடந்த 2019ம் ஆண்டு செபியா கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அப்போது முதல் தன் வாழ்வில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை செய்தது முதலே செபியாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது செபியாவுக்கு மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி இ.எஸ்.ஐ மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க | வண்ண வண்ண ஓவியங்களால் கலர்புல்-ஆக மாறிய கோவை லங்கா கார்னர்!
இதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செபியாவுக்கு தொண்டையில் துளையிட்டு அதில் குழாய் வைத்து சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது மூக்கு வழியாக சுவாசிக்க முடியாமல் தொண்டையில் இடப்பட்ட துளை மூலமாகவே சுவாசித்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படிப்பட்ட நரக வாழ்க்கையை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் செபியா, ஒவ்வொரு முறை பேசும்போதும் தொண்டையில் இடப்பட்ட துளையை அடைத்துப் பிடித்தால் தான் குரல் வெளியே கேட்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இருமல், சளி தொல்லைகள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், வீட்டு வேலைகள் தொடங்கி எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போய்விட்டதாக வேதனை தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க | கோவை மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?
இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏழ்மை நிலையில் வசித்து வரும் இவரால் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியவில்லை. தனக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக செபியா பேசுகையில், தமிழக முதலமைச்சர் என் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, இந்த பிரச்சனையில் எனக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, ESI, ESIC hospital, Local News