ரத்த புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து தயாரிக்க மூலிகை ஆயில் சப்ளை செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறி தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்து கோடிக்கணக்கில் சுருட்டிய 4 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் விஜய்(25). இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகின்றார். இவரை கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்ட நோரா என்ற பெண்மணி கனடாவிலிருந்து பேசுவதாக கூறி அறிமுகமாகி உள்ளார். தான் கனடாவில் மருத்துவ நிறுவனத்தில் சி.இ.ஓ வாக இருப்பதாகவும், கனடாவில் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ வாய்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதற்கு உதவுமாறு விஜயிடம் லிங்க்டு இன் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த தொழிலில் கமிஷனாக இரண்டு மடங்கு நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறிய அவர், குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு மருந்து தயாரிக்க மூலிகை ஆயில் வேண்டும் எனவும் 1லிட்டரின் விலை ரூ.1.80 லட்சம் எனவும் அந்தப் பொருள் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிடைப்பதாகவும் தெரிவித்து நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் அவர் கொடுத்துள்ளார்.
அவர்களிடமிருந்து மூலிகை ஆயிலை வாங்கி தனக்கு ஏற்றுமதி செய்தால் 1லிட்டர் 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என அவர் கூறியதை நம்பி ஏற்றுமதி உரிமம் உள்ளிட்டவற்றை வாங்கிய விஜய் முதற்கட்டமாக மாதிரிக்காக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து 1லிட்டர் மூலிகை ஆயிலை வாங்கியுள்ளார். பின்னர், நோராவிற்கு தகவல் தெரிவிக்க மூலிகை ஆயில் உண்மையானதா என சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி மும்பையில் இருந்து மூலிகை ஆயிலை சோதனை செய்ய வெளிநாட்டு பெண் ஒருவர் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
அப்போது அறிமுகப்படுத்திக்கொண்ட வெள்ளைக்கார பெண்மணி ஒரு ஊசியில் மூலிகை ஆயிலை எடுத்துக்கொண்டு மீண்டும் உடனடியாக மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர், மூலிகை ஆயில் உண்மை எனக்கூறி மொத்தமாக 18 லிட்டர் மூலிகை ஆயில் வேண்டும் என கூறியதால், விஜய் அதற்கான தொகையாக சுமார் 34 லட்சம் ரூபாய் பணத்தை டெல்லி நிறுவனம் கூறிய வங்கி கணக்கில் செலுத்திய பின் மொத்த கும்பலும் தொடர்புகளை துண்டித்து விட்டனர். இதனால், சந்தேகம் அடைந்த விஜய் ரூ. 34லட்ச ரூபாய் ஏமாந்தது தெரியவந்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், டெல்லி மற்றும் கனடா நிறுவனம் உள்ளிட்ட அனைத்தும் போலி என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கனடாவில் இருந்து பேசியதாக கூறப்பட்ட பெண்மணி போல போலியான புகைப்படங்களை பயன்படுத்தியும், வெளிநாட்டிலிருந்து பேசியது போல தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விஜய் 34 லட்ச ரூபாய் அனுப்பிய வங்கி கணக்குகளை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது, மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் வீடு எடுத்து நைஜீரிய கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று பதுங்கி இருந்த நான்கு நைஜீரியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒகோரிகார்ஸ்வில் சைனாசா(32), உச்சே ஜான் இமேகா(47), காட்வின் இமானுவேல்(32) மற்றும் எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) என்பது தெரியவந்தது. குறிப்பாக லிங்க்டு இன் மற்றும் இந்தியா மார்ட் வெப்சைடில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்யக்கூடிய சிறிய தொழிலதிபர்களை குறிவைத்து நைஜீரிய கும்பல் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மூலிகை பொருட்கள் தேவைப்படுவதாக கூறி தொழிலதிபர்களை குறிவைத்து, மூலிகை பொருட்கள் இருக்கக்கூடிய நிறுவனங்களை அறிந்து வைத்து அங்கு போலியாக நிறுவனம் தொடங்கி நைஜீரியர்கள் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கமாடிட்டி ஸ்கேம் என்ற பெயரில் வெறும் வாட்ஸ் அப் மற்றும் மெசேஜ் மூலமாக மட்டுமே பேசி இந்த மோசடியை நைஜீரிய கும்பல் அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணையில் இந்த கும்பல் இந்தியா முழுவதும் பல தொழிலதிபர்களிடம் சுமார் ரூ. 20 கோடிக்கும் இதே பாணியில் ஏமாற்றியுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு நைஜீரியர்களையும் டிரான்ஸிட் வாரண்டு பெற்று கொண்டு சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை மூலிகை ஆயில் மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஏற்கனவே ஆறு புகார்கள் பதிவாகி இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் இந்த ஆறு மோசடிக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த கும்பல் இதே போல எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி உள்ளது, மேலும் இந்த கும்பலில் தலைமறைவாக இருக்கும் நபர்கள் யார்? யார்? என தெரிய போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதே போன்ற மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் ஒருவரை கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News