சென்னையை அடுத்து நாவலூரில் உள்ள மதுபானக்கடைக்கு ஷேர் ஆட்டோவில் வந்த ஓருவர் மதுபாட்டில் வாங்க கள்ளநோட்டான 500 ரூபாய் தாளை கொடுத்துள்ளார். மதுபானக் கடை ஊழியர் ரூபாய் நோட்டினை வாங்கியதும் அதன் மீது சந்தேகம் ஏற்பட்டு கேட்டபோது அந்த நபர் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்.
இதனையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாழம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மீண்டும் வாகனத்தை எடுக்க டாஸ்மாக் கடைக்கு வந்த லோகநாதனை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியை சேர்ந்த 47-வயதான லோகநாதன் என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து போலி 500 ரூபாய் நோட்டுகளை கைபற்றிய போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவரது கூட்டாளியான இசிஆர் உத்தண்டி பகுதியை சேர்ந்த 43-வயதான எபினேசனை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவரிடம் இருந்த ரூபாய் 41000 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது..
மேலும் இருவரும் அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரியவந்தது. தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் தனிப்படை அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் கும்பலை பிடிக்க விமானத்தில் பறந்து திருச்சிக்கு சென்று ஒரே நாளில்
திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் (30), செந்தில் (40), உளுந்தூர் பேட்டையை சேர்ந்த எட்வர்டு ஆரோக்கிய ஜெனர் (28) ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதேபோல் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சரவணன் (41), திம்மாவரத்தை ஜெயகாந்த் (47), பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சாந்த்குமார் (34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 6 பேரை கைது செய்த தனிப்படையினர் தாழம்பூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷன், ஒரு லேப்டாப், போலி பணம் அச்சடிக்க பயன்படுத்தும் 1000 காகிதங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்த 8 பேரையும் தாழம்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 2.27 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளநோட்டு என்ற வார்த்தை மக்கள் மத்தியில் மறைந்த நிலையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட ஒரு பெரிய கும்பல் வேலை செய்து வந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Fake Note