விவசாயிகள் கோடை காலத்தை கணக்கில் கொண்டு தர்பூசணி சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டும் சிறுவாடி, நடுக்குப்பம், வண்டிப்பாளையம், ஆலத்தூர், வடநெற்குணம், ஆலங்குப்பம், ஆத்தூர், நகர், அடல், ஓமிப்பேர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடியை செய்து வருகின்றனர். தற்போது பருவமழை ஓய்ந்து கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே அதிகம் நீடிக்கும். இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
எனவே மக்கள் வெயிலை சமாளிக்கும் வகையில் இளநீர் உள்ளிட்ட பானங்களை தேடி செல்ல தொடங்கி விட்டனர். இந்நிலையில், அதிக நீர் சத்து கொண்ட தர்பூசணியையும் பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குவர். சந்தைக்கு தர்பூசணியை விற்பனைக்கு கொண்டு செல்லும் விதமாக மரக்காணம் பகுதியில் தர்பூசணி அறுவடை பணியை விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டுகளில் ஒரு டன் தர்பூசணி பழங்கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரைக்கும் தான் விலை போனது. இதனால் இதை சாகுபடி செய்த விவசாயிகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டத்தில் சிக்கினர்.
ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணியை 8,000 முதல் 12,000 ரூபாய் என்கிற விலையில் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி, சென்னை, கோவை மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பி வைத்து வருகின்றனர். பொதுவாக மரக்காணம் பகுதியில் விளையும் தர்பூசணிக்கு என்று தனி சுவை இருக்கும். எனவே எப்போதும் இந்த பகுதி தர்பூசணிக்கு தனி மார்க்கெட் உண்டு. இதனால் தான் வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிட்டு பழங்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்காகவும் இந்த பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கோடைகாலம் ஆரம்பிக்க துவங்கியுள்ள நிலையிலேயே அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களும் தர்பூசணி பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். எனவே தர்பூசணி வியாபாரிகளுக்கு இந்த முறை நல்ல லாபம். மேலும் அந்த வகையில் விழுப்புரத்தில் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தர்பூசணி பழங்களை விற்க ஆரம்பித்து உள்ளனர். ஒரு கிலோ தர்பூசணி 20 ரூபாய்க்கும், ஒரு பீஸ் தர்பூசணி 10, 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது” என சில்லறை வியாபாரி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram