இந்தியாவில் 21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது.
தென்னை விவசாயிகளுக்கு மரம் ஏறுவது என்பதே பெரிய சவலான விஷயமாக இருந்து வருகிறது. மரம் ஏறுவது என்பது கீழே இருந்து பார்க்கும் அளவுக்கு சுலபமான விஷயம் இல்லை. முன்பெல்லாம் கிராமங்களில் சிறுவர்களுக்கு கூட மரம் ஏறும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வாக கொண்டு வரப்பட்டதுதான் தென்னை மரம் ஏற பயன்படுத்தக்கூடிய கையடக்க கருவி.
பனை மரங்களிலும் ஏறலாம் :
தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததும் இவர்களுக்கு கூலியும் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தென்னை, பனை மற்றும்பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது தான் இந்த தென்னை மரம் ஏறும் கையடக்க கருவி.
விலை எவ்வளவு?
இவை தற்போது சந்தைகளில் ரூ.3 ஆயிரம் முதல் கிடைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நடராஜன்(55), என்பவர் தென்னை மரம் ஏறும் கருவியை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார். இந்த கருவியை அவர் பயன்படுத்தும் முறையை காண அவரது தோட்டத்திற்கு விரைந்தோம். தனது விவசாய பணிகளை முடித்துவிட்டு தென்னை மரம் ஏறும் கருவி குறித்த முழு விளக்கத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார் நடராஜன்.
இவ்வளவு சேமிக்கலாமா?
இதுகுறித்து இவர் கூறுகையில், “நான் 50 மரங்கள் வைத்துள்ளேன். வருடத்திற்கு 6 முறை தென்னை மரங்களில் இருந்து காய்களை பறிப்போம். அதில் ஒவ்வொரு முறையும் காய் வெட்டும் தொழிலாளர்களுக்கு ரூ,2,500 கூலி தொகையாக வழங்க வேண்டிய உள்ளது. மேலும் சரியான நேரத்தில் தொழிலாளர்களும் வருவதில்லை. இதனால் தேங்காய் கீழே விழுந்து வீணாவதும் உண்டு. முன்பெல்லாம் நானே மரம் ஏறினேன். ஆனால் தற்போது வயதாகிய நிலையில் மரத்தில் ஏற முடியவில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் கூலிக்கு ஆள் வைத்து தேங்காய்களை வெட்டி வந்தேன்.
பின்னர் தெரிந்தவர் மூலம் அதற்கு ஆலோசனை கேட்டு இந்த கருவியை ரூ.3,000க்கு ஆர்டர் செய்து வாங்கினோம். அதன் பின்னர் ஒரே நாளில், இதில் ஏறுவதற்கு பழகிக்கொண்டேன். தற்போது நானே ஏறி தேங்காய்களை பறித்து விடுகிறேன். இந்த கருவி மூலம் ஆட்கூலி செலவு குறைவதால் வருடத்திற்கு ரூ.15,000 கூடுதல் லாபம் கிடைக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பயன்படுத்துறது ரொம்ப ஈஸி :
மேலும், இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்தலாம். மேலும் அரசு தற்போது இந்த கருவியை வாங்குவதற்கு மானியங்களை வழங்கி வருகிறது. இதுபோன்ற கருவிகளை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். மேலும் இதுபோன்ற கருவிகளை விவசாயிகளுக்காக உருவாக்கி கொடுத்தால் இன்னும் விவசாய துறையில் முன்னேற்றம் காண முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai