கரீப் பருவ காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் உர மானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையான ரபி பருவ காலத்தில் விவசாயிகளுக்கான ஊட்டச்சத்து சார்ந்த உர மானியத்தை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையான கரீப் பருவ காலத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஸ் உரங்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த மானிய விகிதங்களை நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நடப்பு கரீப் பருவ காலத்தில் யூரியா உரத்துக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயும், டிஏபி-க்கு 38 ஆயிரம் கோடி ரூபாயும் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க... ஜல்லிக்கட்டுக்கு தடையா? விலக்கா...? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு...!
இதன்மூலம், சில்லரை விற்பனையில் உரத்தின் விலை உயராது என்றும், 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதேபோல, ஐடி ஹார்டுவேர் துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கும் இரண்டாம் கட்ட திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மன்சுக் மாண்டவியா கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.