ராமநாதபுரம் அருகே கீழக்கரை மாணவர் மின்சார யூனிட்டுகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை கருவி கண்டுபிடித்து அசத்தியுள்ளார். தமிழக முதல்வரை சந்தித்து இந்த தயாரிப்பை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற குறிக்கோளையும் கொண்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. மின்சாரம் மனிதனுக்கு பல வகைகளிலும் பயன்படுவதால் அதன் தேவைகள் மென்மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் மின்சாரச் சிக்கனம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம், மின்சார பயன்பாடு என்பதும் அதிகரித்துள்ளது. மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் மின் சேமிப்பு என்பது அவசியமாகியுள்ளது. வீடுகளில் மின்சார பயன்பாடு நமக்கு தெரியாமலே இருந்து வருகிறது. இன்றைக்கு நம் வருமானத்தின் கணிசமான பகுதியை மின்சாரக் கட்டணமாகவே செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. மின்சார ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து கணக்கெடுத்த பின்னரே நாம் செலுத்த வேண்டிய கட்டணம் நமக்கு தெரிய வரும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சேகு பஷீர் அகமது. இவரது மகன் முஹம்மது சமர் மரைக்கா (வயது 16). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-வது வகுப்பு படித்து வருகிறார். இவர் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார்.
இது குறித்து மாணவர் முஹம்மது சமர் மரைக்கா தெரிவித்தபோது, தற்போது வீடுகளில் பல்வேறு மின் உபயோக சாதனங்களை மக்கள் உபயோகித்து வருகின்றனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார யூனிட் அளவுகள் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் ஏராளமான மக்கள் இருந்து வருகின்றனர். இதனால் மின்சார பயன்பாடு அதிகரித்து மின் கட்டணம் அதிகரித்து மின்கட்டணத்தை செலுத்த முடியாத மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக மின்சார பயன்பாட்டை நுகர்வோர் முன்னதாக அறிந்து கொள்ளும் வகையில் மின்சாரக் கருவி தயாரித்து உள்ளேன். மின் பயன்பாட்டின் அளவு இலக்கை நெருங்கும்போது இந்தக் கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
மேலும், இதில் சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளதால் தங்களது செல்போன்களுக்கு இதற்கான மெசேஜ் உடனடியாக வந்து சேரும், இதன் மூலம் நாம் உடனே சுதாரித்து அதிகப்படி மின்சார பயன்பாட்டை தவிர்த்து கொள்ள முடியும்.
இதையும் வாசிக்க: ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதித்த அமெரிக்கா.. காரணம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட் வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. இதில் மின்சார மீட்டரில் 90 யூனிட் வந்தவுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை ஒலி வந்து விடும். அதே போல் பல விகிதங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் வகையில் கருவி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து தங்கள் மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும். இது தவிர மேலும் பல்வேறு வசதிகளை பெறும் வகையில் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியுடன் தான் இந்த கருவியை வீடுகளில் மீட்டரில் பொருத்த முடியும். இந்தக் கருவியை கண்டு பிடிக்க சுமார் ஆறு மாத காலம் ஆனது. இதனுடைய மொத்த செலவு ரூ. 1500. மின்சார பயன்பாட்டை நுகர்வோர் அறிந்து கொள்ள நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியில் ஆய்வு மேற்கொண்டேன்.
இதையும் வாசிக்க: தொடரும் வேலை இழப்புகள்.. கலக்கத்தில் அமேசான் ஊழியர்கள்…
தற்போது அதற்கான கருவி கண்டு பிடித்துள்ளேன். இந்த கருவியை நிறுவியவுடன் நம் மின் கட்டணம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவை நாம் மின்சாரத்தை பயன்படுத்தும் அளவை எச்சரிக்கை ஒலியை அளிக்கும். நாம் தான் அதன் அடிப்படையில் மின்சாரத்தை பயன்படுத்தும் தன்மையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த கண்டுபிடிப்பு குறித்து தமிழக முதல்வரையும் மின்சாரத் துறை அமைச்சரையும் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் இந்த தயாரிப்பை தமிழக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்: வீரக்குமரன், ராமநாதபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electricity, Electricity bill