உலக அளவில் மாசுக் கட்டுப்பாடு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வாகனங்களுக்குத் தான் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு ஓசோன் மண்டலத்தை மிக கடுமையாக பாதிக்கிறது. வாகனங்கள் இல்லாமல் இருக்கவும் முடியாது என்பதால் வாகனங்களால் மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தற்போது பிஎஸ்6 என்ற மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் முதல் கட்ட விதிகள் நடைமுறையில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நடைமுறைக்கு வர உள்ள இந்த கட்டுப்பாட்டின் படியே ஒவ்வொரு வாகனமும் தயாரிக்கப்பட வேண்டும். இதனால் பல மாற்றங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. பிஎஸ் 6 முதல் ஸ்டேஜ் மற்றும் பிஎஸ் 6 இரண்டாவது ஸ்டேஜிற்கு இருக்கும் ஒரே வித்தியாசம் ரியல் டைம் மானிட்டரிங் தான். பிஎஸ் 6 முதல் கட்டத்தில் ஒரு வாகனத்தின் மாசு அளவு ஆலையில் டெஸ்ட் செய்யப்படும் போது குறிப்பிட்ட அளவிற்குக் குறைவாக இருந்தால் போதுமானது. அந்த இன்ஜினை வாகனத்தில் பொருத்திப் பயன்படுத்தலாம். ஆனால் பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் ஒரு இன்ஜினில் ரியல் டைமில் மாசுவை கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு விற்பனைக்கு வரும் வாகனங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அளவை விட அதிகமான மாசு வாகனத்தின் இன்ஜினிலிருந்து வெளியேறினால் உடனடியாக டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
அந்த வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும். இந்த பிஎஸ் 6- இரண்டாம் கட்ட மாற்றத்திற்குத் தகுந்தார் போல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இன்ஜினை மாற்ற வேண்டும் என்றால் வாகனத்தின் ஹார்டுவேர், சாஃப்ட்வோர் மற்றும் செமி கண்டெக்டர்களை மாற்ற வேண்டும். இதனால் வாகனத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகும். இது வாகனத்தின் விலையில் எதிரொலிக்கும்.
தற்போதே பல நிறுவனங்கள் தங்கள் வாகனத்தின் விலையை உயர்த்தி விட்டது. பயணிகள் வாகனத்தைப் பொருத்தவரை 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வாகனத்தின் இன்ஜின் அளவை பொருத்து விலை அதிகரிக்கப்படும். கமர்ஷியல் வாகனங்களுக்கு 5 சதவீதம் வரை விலை அதிகரிக்கப்படும். இதில் என்ட்ரி லெவல் வாகனங்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படும்.
இந்த விலையேற்றம் கார்கள் மட்டுமல்ல டூவீலர், 3 வீலர்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த பிஎஸ் 6 ஸ்டேஜ் 2 கட்டுப்பாட்டிற்குத் தகுந்தார் போல் இன்ஜினை மாற்றுவதில் பெரிய பாதிப்பைப் பெறப்போகும் இன்ஜின் என்றால் டீசல் இன்ஜின் தான். பெரிய டீசல் இன்ஜின்களில் இந்த மானிட்டரிங் கருவியைப் பயன்படுத்துவது எளிது தான். ஆனால் சிறிய டீசல் இன்ஜின்களில் இதை பயன்படுத்துவது கடினம். இதற்காக ஆகும் செலவு அதிகம்.
இதனால் பல நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின் உடன் வரும் வாகனங்களில் டீசல் இன்ஜினையே மொத்தமாக நிறுத்திவிட்டன. பெட்ரோல் இன்ஜின்களை மட்டும் தான் விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா அமேஸ், டாடா அல்ட்ராஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களின் டீசல் இன்ஜின் வேரியன்ட்கள் முற்றிலுமாக ஏப் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile