இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் தரமான நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல நகரங்களை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படி சாலைகள் மிக நவீனமாக மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் டயர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் விபத்துக்களைத் தடுக்க முடியும் எனவும், டயர் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களுக்கான பாதுகாப்பு குறித்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் சாலையில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் நிதின்கட்கரி அம்ரிஸ்டர்-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய அவர் இந்தியாவில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருவதாகவும். அடுத்த கட்டமாக சாலைகளில் விபத்துக்களைக் குறைக்க டயர்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வேகம் அதிகமான நிலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது மத்திய அரசு இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா முழுவதும் விற்பனையாகும் டயர்களின் தரத்தை உயர்த்துவது மூலம் பாதுகாப்பான பயணம் உறுதியாகும் எனக் கூறினார். இதற்காக டயர் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டயர்களின் தரத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது மூலம் டயர் வெடித்து விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் எனவும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விரைவில் டயர் தயாரிப்பிற்கான புதிய வரையறையை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : சிஎன்ஜி நிரப்பும் போது காருக்குள் இருக்கலாமா?
அதே நேரம் டயர்களின் தயாரிப்பு செலவும் அதிகமாகும். இதனால் டயர்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. விலை அதிகமானாலும் அதன் உழைப்பும், தரமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். வழக்கமாக 10 ஆயிரம் கி.மீ ஓடும் டயர் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டால் 12-15 ஆயிரம் கி.மீ வரை உழைக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் தற்போது சர்வதேச தரத்திற்கு 32 நெடுஞ்சாலைகள் உள்ளன.
அந்த சாலைகளின் வேகத்தை அதிகப்படுத்தவேண்டும் என்றால் டயர்களின் தரத்தையும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Nitin Gadkari, Vehicle