இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட 12.2 கோடி பேர் தங்கள் வேலையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊரடங்கு பொருளாதார ரீதியாக பலரையும் முடக்கியுள்ளது . இந்த நிலையில் உங்களுக்கும் இந்த சூழ்நிலை வந்தால் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதே இந்த கட்டுரை. மனதை திடமாக்குங்கள் : ஒருவேளை உங்களுக்கும் வேலை பறிக்கப்பட்டால் முதலில் மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல பலரும் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்துகொண்டு அதிலிருந்து விலகி அடுத்து என்ன என்பதை திட்டமிடுங்கள். பகிருங்கள் : வீட்டில் இருப்போரிடம் வேலை பறிபோனதை பக்குவமாக எடுத்துக் கூறுங்கள். நிச்சயம் இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா என வருத்தபடுவார்கள். அவர்களுக்கு நீங்கள்தான் நம்பிக்கை வார்த்தை அளிக்க வேண்டும். சேமிப்பு : தற்போது பொருளாதார ரீதியாக உங்களை பலப்படுத்திக்கொள்ள இதுவரை நீங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை பயன்படுத்துங்கள். ஃபி.எப் பிடித்தம் இருந்தாலும் அதை எடுத்து பயன்படுத்துங்கள். புதிய வேலை : வேலை போய்விட்டதே என நினைக்காமல் புதிய வேலைக்கான வாய்ப்பு என பாசிடிவாக நினைத்து நண்பர்கள், சமூக வலைதளங்களில் உங்களுக்கு வேலை தேவை என்பதை நண்பர்களிடன் சொல்லி வையுங்கள். உங்கள் ரிசியூமை அப்டேட் செய்துகொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளும் பக்குவம் : எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளுங்கள். இது தற்காலிகமானது என நினைத்து செய்யுங்கள். தற்போது உங்களுத் தேவை பொருளாதார ரீதியில் தொய்வின்மை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். லோன் கட்டுப்பாடு : இன்சூரன்ஸ் போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கு தற்போது பணம் இல்லா சூழல் இருக்கும். எனவே அவற்றை தற்காலிகமாக தள்ளி போடுங்கள். லோன் இருந்தால் வங்கியை அணுகி உங்கள் நிலையைக் கூறி என்ன செய்வது என ஆலோசனை பெறுங்கள். சிக்கனம் : வீட்டில் சில விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. உங்களுக்கே அது அத்தியாவசியமற்றது என தோன்றினால் செலவு செய்யாதீர்கள். வீட்டில் இருப்போருக்கும் இதன் அவசியத்தை உணர்த்துங்கள்.