நோய் தொற்றுகள், வைரஸ்களை எதிர்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல், சுகாதாரத்தை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் என செய்தால் மட்டும் போதாது. அதோடு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதலும் அவசியம். அந்த வகையில் ஆச்சரியத்திற்குறிய விஷயம் என்னவெனில் தண்ணீர் குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பதுதான். எப்படி தெரியுமா..? தண்ணீர் நம் வாழ்வதற்கான இன்றியமையாத ஒன்று. அதில் உள்ள ஊட்டச்சத்துகளும் ,மினரல் சத்துகளும் உடலுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களாகும். தண்ணீர்தான் உடலின் தேவையற்ற நச்சுகள், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகின்றன. அதோடு உடலில் வெப்பநிலையை சீராகப் பராமரிப்பதிலும் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோல் யாருக்காவது உடல்நிலை சரியில்லை, தொற்று எனில் மருத்துவர்களின் முதல் ஆலோசனை தண்ணீர் நிறைய குடியுங்கள் என்பதுதான். ஏனெனில் அதற்கு பாக்டீரியாக்களையும், கெட்ட நச்சுக் கிருமிகளையும் அகற்றும் சக்தி உள்ளது. தண்ணீர் உடல் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை கொண்டு சேர்க்க உதவுகிறது. இதனால் உடல் சீராக இயங்குகிறது. எனவேதான் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது தினமும் குடிக்க அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக உடல் நிலை சரியில்லாதபோது சாதாரணமாக சுத்தமான தண்ணீரைக் குடிப்பதே அதிலிருந்து மீண்டு வர உதவும். தினமும் 8 கிளாஸ் தண்ணீர்க் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். வெறும் தண்ணீரைக் குடிக்க விருப்பமில்லை எனில் எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம் அல்லது புதினா கலந்து குடிக்கலாம்.