பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு என்ற சொற்றொடர் கனகச்சிதமாக பொருந்துவது சில்க் ஸ்மிதா என்ற நடிகைக்கு தான்.
தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்கு பிறகும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்களும் நிரம்பியது.
ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி ஆக பிறந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர்.
சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில்க் ஸ்மிதா நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்தார்.
வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குனர் வினுசக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.
தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார்.
முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதா விற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.
அன்றைய தேதியில் தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினார். இதன்காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா.
பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களே வழங்கப்பட்டாலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது சில்க்ஸ்மிதாவின் கனவு.
மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் நடிப்பில் துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா.
பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார்.
தமிழைக் காட்டிலும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டிய சில்க் ஸ்மிதா மலையாள திரையுலகில் நடிக்க வாய்ப்புடைய கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதாக எண்ணினார்.
கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஒளிந்து உள்ளன.
அன்றைய தேதியில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது, நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது எழுந்து நிற்க மறுத்தது உள்ளிட்ட ஏராளமான குறைகள் சில்க் ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக இன்றும் வரலாற்றில் சித்தரித்தது.
தான் சம்பாதித்த பணத்தை பண்ணையார்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க்ஸ்மிதாவின் மற்றொரு முகம் பலரும் அறியாத ஒன்று.
சிறுவயதில் பல நெருக்கடிகளுக்கும் ஆளான காரணத்தால் தானொரு நக்கலாக நினைப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் சில்க் ஸ்மிதா.
மர்மங்களால் நிறைந்த சில்க்ஸ்மிதாவின் இறுதி வாழ்க்கையில் தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யாரென கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக் கொள்ள ஆள் இல்லாத அனாதை பிணமாக வைக்கப்பட்டிருந்தார்.
தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் சுமிதாவின் உடலை பெற்றுக்கொண்டனர் எனினும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சில்க் ஸ்மிதா கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
புகழின் உச்சியில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா மரணத்தின் போதும் மர்மங்களோடே மண்ணுலகை விட்டு மறைந்தார்.
சில்க் ஸ்மிதா மறைந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பல திரை ரசிகர்களுக்கு நினைவில் நீங்காத பெயராக நிலைத்திருக்கும் சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணைய தொடர்களாக இன்னுமும் வெளிவந்து கல்லாக் கட்டிக் கொண்டிருக்கின்றன.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன் என்ற பழமொழி சில்க் ஸ்மிதா விற்கு கன கச்சிதமாக பொருந்தும் ஒன்று.
சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று..
காணக் கிடைக்காத சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்கள்.