இந்த கொரோனா எதிர்பாராத விஷயங்களை எல்லாம் நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்றுதான் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டி பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியது. இந்த நடைமுறை 2 மாதங்களாக நீடித்து வருகிறது. இது 2 மாதங்களுக்கு மட்டுமல்ல இந்த 2020 ஆண்டையே Work From Home ஆக மாற்றிவிடலாம் என பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது வைரஸ் தொற்றுகளை முற்றிலுமாக அழிக்கவும், மக்களின் உடல்நலன் கருதி எடுக்கப்பட்ட திட்டம் என்றாலும் மனதளவில் ஊழியர்களை பாதிக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் கூறியுள்ளார். அதாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்திய நாதெல்லா பேசுகையில் “இந்த Work From Home திட்டம் மனிதர்களின் சந்திப்பை தடை செய்யும். என்னதான் வீடியோ மீட்டிங் செய்தாலும் அதில் எந்தவித ஈர்ப்பும் இருக்காது. அது நேரடி சந்திப்பை நிகராக்கிட முடியாது. சந்திப்புகள் , கலந்துரையாடல்கள் அனைத்தும் காணாமல் போகும் ’எனக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மனிதர்களின் மனநிலையைக் குறித்து பேசும்போது அது இன்னும் கடுமையாக பாதிக்கும் என்றார். அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஊழியர்கள் தங்களுடைய அலுவலக நெறிமுறை, அலுவலகக் கலாச்சாரத்தையே மறந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் சமூக வாழ்க்கை என்பது சமூக வலைதளங்களிலேயே முடிந்துவிடும். தங்களுடைய வாழ்க்கையையே நான்கு வீட்டுச் சுவற்றுக்குள் முடித்துக்கொள்வார்கள். குழு வேலை, குழுவாக சேர்ந்து கிடைத்த வெற்றி என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது” என்று தன்னுடைய கருத்துக்களை கூறியுள்ளார்.