தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 489 நபர்களுக்கு ரூ.3.79 கோடி ரூபாய் கடன் வழங்காமல் நகையை மட்டும் பெற்றுக்கொண்டு, கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் முறைகேட்டிற்கு காரணமான சங்கத்தின் செயலாளர் மற்றும் இதர நபர்கள் மீது குற்றப்புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 900க்கும் மேற்பட்ட 5 பவுன் தங்க நகைக்கடன் பெற்ற நிலையில் 343 பேருக்கும் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாகவும், பலருக்கு நகைகளை பெற்று கொண்டு தற்பொழுது வரை பணம் வழங்கவில்லை, வட்டி மட்டும் செலுத்தக் கூறுவதாகவும், எனவே இதில் உள்ள முறைகேடுகளை களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்கிராமத்தினை சேர்ந்த மக்கள் 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் கூட்டுறவு சங்கத்தினை பூட்டுதல், முற்றுகை, சாலைமறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய போதும் பொது மக்கள் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து இருந்தனர். மேலும் இப்பிரச்சினை குறித்து தமிழக அமைச்சர்கள்; எ.வ.வேலு, கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனுவும் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2021 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 489 நபர்களுக்கு ரூ.3.79 கோடி ரூபாய் கடன் வழங்காமல் நகையை மட்டும் பெற்றுக்கொண்டு, கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், நகைக்கடன் தள்ளுபடி பெறும் நோக்கத்தில் அடமானம் வைக்கப்பட்டு இருப்பதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் 24ந்தேதி முதல் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சங்க தலைவர் தற்காலிகமாக செல்வராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் முறைகேட்டிற்கு காரணமான செயலாளர் மற்றும் இதர நபர்கள் மீது குற்றப்புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1983ம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81ன் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் : மகேஷ்வரன், தூத்துக்குடி மாவட்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Thoothukudi