முறை தவறிய உறவால் பெண் தற்கொலை - கள்ளக்காதலன் கைது

    காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனோகரனுக்கும் கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த 32 வயதான லதா என்பவருக்கும்  6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பின்னர் இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். குழந்தை இல்லாத இந்த தம்பதிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாடிற்கு முன்னர் கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு லதா சென்றுவிட்டார். தாயுடன் வசித்து வந்த லதா கடந்த 7 -ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உறவினர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்ற வீரகனூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் லதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    விசாரணையில், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த லதா அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் ஆட்டோவில் லதா அடிக்கடி சென்று வந்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பரமசிவம் நாள்தோறும் லதாவை வீட்டிலிருந்து வேலைக்கும், பணியிடத்திலிருந்து வீட்டுக்கும் தனது ஆட்டோவில் கொண்டு போய் விட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையிலான நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

    இதை பரமசிவத்தின் மனைவி ராதிகாவின் உறவினர் ஒருவர் பார்த்து ராதிகாவிடம் கூறியுள்ளார். இதையறிந்த பரமசிவத்தின் மனைவி ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் லதாவின் வீட்டிற்கு சென்று அவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் தாக்குறைவாக பேசியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த லதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம் அவரது மனைவி ராதிகா, ராதிகாவின் தாய் ராசாத்தி, சின்னமலர், ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கள்ளக்காதலர் பரமசிவம், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார்,  ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பரமசிவத்தின் மனைவி ராதிகா உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    மேலும் படிக்க: ‘என் வீட்டு கோழிகள் குஞ்சு பொறித்துள்ளன’... சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு!

    Published by:Sheik Hanifah
    First published:March 17, 2020, 17:58 IST